ஆதலால் காதல் செய்வீர்!

அவரவர்க்கான சமரசங்களில்
காதல் அர்த்தபடுத்தப்படுகிறது!
புணர்தலில் காதலின்
வெளிபாடு தெரியும் என்கிறான்
நண்பனொருவன்
எதிர்பார்பற்ற காதலே
நேர்மையானது என்கிறாள்
தோழியொருத்தி
அர்பணித்தலில் காதலின்
சுகம் என்கிறான் மற்றொரு நண்பன்
காதலே பைத்தியகாரத்தனம் என்கிறாள்
மற்றொரு தோழி
பார்வையற்றோர் தடவிப்பார்த்த
யானையைப்போல் நின்றது காதல்
இதனால் யாதொரு
பாதகமும் இல்லை அதற்கு
எப்போதும் போல் அது காதலர்களை
மகிழ்வித்துக்கொண்டிருந்தது
எதோ ஒரு இடத்தில்!

அட்டென்சன் ரோமியோஸ்!

சமீப காலமா என் உள்டப்பில் ஓடுற படம்

“இந்த பொண்ணுங்களை எப்படித்தாங்க புரிஞ்சிகிறது” என்பது தான்.

நான் சுஜாதா படிச்சிருக்கியான்னு கேட்டா, இல்ல சினிமாவில் பார்த்திருக்கேன்றா,

மார்க்ஸ் தெரியுமான்னு கேட்டா நான் மேக்ஸில் 90 மார்க்குன்றா.

என்ன தாங்க பண்றதுங்கிறார் நண்பர்.

புரிஞ்சிகிறதுன்னா உனக்கு என்ன தெரியும், எனக்கு என்ன தெரியும் என்பதில்லைங்க.

உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் நாலெட்ஜ், எனக்கு இதெல்லாம் தெரியும்னு காட்டிகிறது. தேவைப்பட்ட இடத்தில் தேவையான அளவு வாந்தி எடுக்குறது.

நுண்ணறிவு என்னும் இண்டெலிஜென்ஸ் பத்தி கேள்வி பட்டுருக்கிங்களா? சமயோகிதபுத்தின்னு சொல்வாங்க. இடத்திற்கு தகுந்தாற்போல் நடந்துக்கொள்வதும் அதில் ஒன்னு.

ஒருத்தர் உங்களுக்கு ஃப்ரெண்டா இருக்குறதுக்கு தகுதிகள் நிர்ணயிச்சிங்கன்னா உங்களுக்கு நீங்களே ஃப்ரெண்டா இருக்க முடியாது. உங்களுக்கு என்ன தெரியும்னு கேட்டுகிட்டு இருக்குறதுக்கு ஆள் தேடாதிங்க. எப்பவும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்திலேயே இருங்க.

இயற்கையிலேயே பொண்ணுங்க ரொம்ப பாதுக்காப்பு உணர்வு மிக்கவுங்க. நான் இவ்ளோ ஃப்ராங்கா இருக்கேன், நீ ஏன் இல்லன்னு கோவிச்சிகிறது அர்த்தமற்றது.



நீங்க ஒருத்தரை அவுங்க அனுமதியில்லாம விரும்புறது இயற்கையாப்படலாம் ஆனா அம்மாதிரியான விசயங்கள் தான் முகத்தில் ஆசிட் அடிக்கும் அளவுக்கு போச்சு. முதல்ல ஃப்ரெண்டா பேசுங்க. உங்களை பற்றிய நல்ல அபிப்பிராயத்தை வளர்க்க முயற்சி பண்ணுங்க. வெட்டி நம்பிக்கையில் அவ கிடைப்பான்னு லவ் பண்றது உங்களை நீங்களே ஏமாத்திகிறது, ஏமாற்றம் கோவமாகும் போது வன்முறையில் முடியும்.

தெய்வீக காதல், கடலை மிட்டாய், புண்ணாக்கு கதையெல்லாம் இப்ப இருக்கும். ஆனா யதார்த்தம் வேற. இரு தரப்பினரிடமும் சரியான புரிதல் இல்லைனா நீங்க காதலிச்சாக்கூட அது ஒரு வருசத்தை தாண்டாது. இன்னைக்கு தேவதையா திரியுறவ அப்புறம் சனியனா தெரிவா!

உண்மையில் பொண்ணுங்களை புரிஞ்சிக்கிறது ரொம்ப ஈஸி. அதுக்கு நீங்க வாயை மூடிகிட்டு காதை திறந்து வச்சிகிட்டாளே போதும்.

நான் ஏன் சாதியத்தை எதிர்க்கிறேன்!

எவ்வளவோ காரணம் இருந்தாலும் இது ஒரு உதாரணத்திற்காக.

 நான் பிறந்தது மதுரையாக இருந்தாலும் அப்பாவின் சொந்த ஊர் தேனிக்கும், உசிலம்பட்டிக்கும் நடுவில் இருக்கும் கன்னியம்பட்டி. சின்ன வயசுல மூணுசாமின்னு குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்தோட கூட்டிட்டு போவாரு, வளந்தபிறகு நான் போறதில்ல.

அங்கே தேவர் சாதியினர் தான் ஆதிக்கம், வேறு எந்த சாதிக்கும் இல்லாத அளவு ஆதிக்கதிமிர் நிறைந்தவர்கள் அவர்கள். என் கண்ணால் பார்த்திருக்கிறேன். தெருவிற்குள் தாழ்த்தப்பட்டவர்கள் செருப்பணிந்து வர அனுமதியில்லை. தற்பொழுது கொஞ்சம் மாறியிருந்தாலும் தமிழகத்தில் நடந்த சாதி மோதலில் முதலிடத்தில் இருப்பவர்கள் தேவர் சாதியினராகத்தான் இருக்கும்.

இப்ப நான் எடுத்துக்கப்போற விசயம் வேற. காங்கிரஸ் தமிழ் இனத்திற்கு எவ்வளவு துரோகம் செய்துள்ளது என காங்கிரஸ் கட்சிக்காரங்க மனசாட்சிக்கே தெரியும். அதுவல்லாது 2ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த், நிலக்கரி என அவர்கள் ஊழல் செய்து நாட்டை குட்டிச்சுவராக்கியதும் நாம் அறிவோம்.



இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி பகுதியில் திமுக, அதிமுக, மதிமுக என அனைவரும் தேவர் சாதியை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். காங்கிரஸ் சார்பில் இஸ்லாமியர்.

அப்பகுதியில் தாழ்த்தபட்டவர்கள் 15% அவர்கள் ஓட்டு நிச்சயம் தேவர் சாதியினருக்கு போகாது. இஸ்லாமியர் 10% அவர்கள் வாக்கும் மதவாத சக்திக்கு எதிராக என்று காங்கிரஸிற்கே வாய்ப்பு, ஒண்றையனா பெறாத இந்த புண்ணாக்கு சாதியால தமிழகத்தில் இருந்து ஒரு காங்கிரஸ் எம் பி போனா எவ்ளோ கடுப்பா இருக்கும்.

இப்படி சாதி வேட்பாளர்களா பார்த்து ஒவ்வொரு தொகுதியிலும் நிறுத்தி சாதியத்தை நீர்த்துப்போக செய்ய வேண்டிய கட்சிகளே அதை வைத்து அரசியல் செய்யும் பொழுது எப்படி நாடு உருப்படும். தமிழகம் சாதிய ரீதியாக பிரிந்து கிடக்காமல் ஒன்றாக இருந்தால் முல்லை பெரியார் அணையில் நம் உரிமை மறுக்கப்பட்டிருக்குமா?. காவிரி நீரில் நம் பங்கு மறுக்கப்பட்டிருக்குமா?

சக மனிதனின் உயிரை பறித்ததை விட இந்த சாதி உங்களுக்கு என்ன தான் செய்திருக்கிறது. தயவுசெய்து சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்

கடவுள்!.............


ஒருவன் எவ்ளோ பெரிய பக்தி பலாப்பழமாக இருந்தாலும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது உண்மையில் இந்த கடவுள் இருக்கா இல்லையா என யோசிப்பான். அப்படி யோசிப்பவனை திரும்ப இழுத்துப்போட்டு மதத்திற்குள் வைத்திருப்பதே மதத்தின் வெற்றி!

கடவுள் இல்லையென்றால் மதம் இல்லை. மதம் இல்லையென்றால் பிரிவினை இல்லை. பிரிவினை இல்லையென்றால் சண்டை இல்லை. இவ்வுலகில் நில ஆக்கிரமிப்பிற்காக நடந்த போர்களை விட அதிக மக்கள் மதசண்டையில் கொல்லப்பட்டுள்ளனர் என்றால் நீங்கள் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்.

கிறிஸ்தவனிடம் பேசினால் சிலுவையை பற்றிய உபதேசம் பிறருக்கு பைத்தியமாய் இருக்கிறது என்பான். இஸ்லாமியனுக்கு முஸ்லீம்கள் தவிர மற்ற அனைவரும் காஃபீர்கள். இந்துவிடம் பேசினால் நீ கடவுளை மறுத்தாலும் இந்துதான்னு பெரிய குண்டாத்தூக்கி போடுவான். ஆனா கடைசி வரை ஏன் கடவுள் எதற்கு கடவுள்னு யோசிக்க மட்டும் மாட்டான்.

ஆதியில் இருந்தே மக்கள் குழுமத்தை ஒரு தலைவன் நிர்வாகிக்கும் பழக்கம் மனித இனத்திற்கு உண்டு, அவன் என்ன சொன்னாலும் கேட்கனும் அப்பொழுது கடவுள் என்ற பதம் இல்லையேயொழிய அரசன் கடவுள் மாதிரி தான் நடத்தப்பட்டான். அவன் சிறப்பு பிறப்பு அவன் வம்சாவழிகளே மீண்டும் நம்மை நிர்வாகிக்க தகுதியானவர்கள் என்ற கட்டம் வரும்பொழுது அதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க அவனை முன்னிறூத்தி பல வழிபாட்டு துதிகளையும் பாடச்சொன்னேன். காலம் காலமாக அது தொடர்ந்து வருகிறது.

ஆதிகாலத்துக்கு மனிதனுக்கு இயற்கையின் மேல் இருந்த பயத்தை விட மரணத்தின் மேல் அதிக பயம் இருந்தது. அதுவரை அனுபவித்ததை அப்படியே விட்டு செல்லவேண்டும் என்பதை அவனால் ஜீரணிக்கமுடியவில்லை. இறப்பிற்கு பின் என்ன என்ற குழப்பத்தில் ஒருவனுக்கு ஏற்பட்ட கனவே மறுஜென்மத்திற்கான முதல் விதையை விதைத்தது. ஆம் ஒருவனது கனவில் வந்த இறந்தவன் அவனை குழப்பினான். அவன் எங்கே இருக்கிறான் எப்படி வந்தான் என யோசித்தவன் முடிவில் இதுவல்லாது எதோ ஒரு உலகம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான்.

தகவல் தொடர்பே ஒன்றை தொட்டு அடுத்ததற்கு நம்மை யோசிக்க வைத்தது, அன்றிருந்த குறைந்தபட்ச தகவல் தொடர்பிற்கு அதற்கு மேல் மனிதனால் சிந்திக்கமுடியவில்லை. எதோ ஒன்று இருக்கிறது என்று முடிவுக்கு வந்தவன் நாளடைவில் அதற்கு உருவம் கொடுத்தான். குழுக்கள் பிரிந்தது ஒவ்வொருவரும் அவர்கள் வசதிகேற்ப வழிபாடுகளை வைத்துக்கொண்டனர். ஆபிரஹாம மதத்தின் தோற்றம் வரை உலகில் உருவ வழிபாடு மட்டுமே இருந்தது.

ஆபிரஹாம மதத்தின் தோற்றத்தின் போதே இந்தியசுற்று வட்டார பகுதிகளில் த்வைதம், அத்வைதம் என்ற உருவ மற்றும் உருவமற்ற வழிபாட்டு சிக்கல்கள் உருவாகின. கடவுளை மனிதனைப்போல் காது, மூக்கெல்லாம் வச்சு, தினம் காலையில் மனிதனைப்போலவே கக்கா போக வைப்பதெல்லாம் அவனால் ஏற்றுக்கொள்ள முடியாததே அதற்கு காரணம். நன்றாக சிந்தித்தி பார்த்தீர்களேயானால் உலகில் உள்ள மதம் அனைத்திற்கும் ஒன்றிற்கொன்று தொடர்பிருப்பது தெரியும்.

இன்று பகுத்தறிவு இல்லாத மனிதனே இல்லை M370 விமானம் ஆஸ்திரேலியாவிற்கு மேற்கே விழுந்து விட்டதாம் என்றால் தெக்கால போக வேண்டிய விமானம் ஏண்டா வடக்கால வந்துச்சு என உலக வரைபடம் தெரிந்த ஒவ்வொருவனும் கேப்பான். ஒருவிசயத்தின் அதிகபட்ச சாத்தியகூறுகளை ஆராய்வதே பகுத்தறிவு. கடவுள் விசயத்தில் மட்டும் ஏன் பலருக்கு பகுத்தறிவு வேலை செய்வதில்லை என தெரியவில்லை.

சிலரால் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது கடவுள் செயல் என கன்னத்தில் போட்டுகொண்டு ஒதுங்கி சென்று விடுகிறான். அதை புரிந்து கொள்ள சிரத்தையே மேற்கொள்ளாதவன் கலைக்டர் போறார் கோயிலுக்கு, முதலமைச்சர் போறார் கோவிலுக்கு அவங்க என்ன முட்டாளா அதுனால நானும் போவேன் என்கிறான். சுயமா அறிவில்லாதவன் தான் அடுத்தவன் பண்ணான் நானும் பண்ணேன்னு சொல்லுவான்.

காலம் காலமாக தொன்று தொட்டு வந்த வழக்கம் என்பதால் உளவியல் ரீதியாக கடவுள் வழிபாடு சிறிது மன அழுத்ததை குறைக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் அதுவே தீர்வாகாது. எதாவது ஒருகட்டத்தில் அதுவே உங்களுக்கு அதிக மன அழுத்தத்தைக்கொடுக்கலாம். உங்களது இயற்கை கடமைகளிலிருந்து நீங்கள் விடபட நினைக்கத்தோன்றும் அளவிற்கு கடவுள் பக்தி உங்களை இழுத்துச்செல்லும். பயந்து ஓடுபவர்கள் என அதை கடவுள் மறுப்பாளன் சொல்லுவான்

இவ்வுலகை படைத்தது கடவுள் என்றால் கடவுளை படைத்தது யார்?
கடவுள் சுயம்பு என்றால் ஏன் இவ்வுலகம் சுயம்பாக இருக்கக்கூடாது. இந்த பிரபஞ்சத்தை என்றேனும் பார்த்துள்ளீர்களா? அதற்கு முன் நாம் அணுவிலும் ஆயிரம் கோடி மடங்கு சிறியவர்கள். ஆனால் அந்த பிரபஞ்சத்தை அறியும் அறிவை பெற்றுள்ளோம். கற்றதை தகவல் தொடர்பு மூலம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றால் மட்டுமே இதற்கொரு தீர்வு கிடைக்கும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதால் எந்தவித பயனும் இல்லை. எத்தனையோ கோடி பேர் பிறந்தது போல் நீயும் பிறந்தாய் செத்தாய் அவ்ளோ தான்.

இப்பிரபஞ்சம் உருவாக கடவுள் தேவை என்பவர்கள் உரையாடலுக்கு வரலாம்!

யாருக்கு உங்கள் ஓட்டு?

பொதுவா கட்சிகளோட கூட்டணி அந்த கட்சிக்கு இருக்கும் வாக்கு வங்கி அடிப்படையிலயே இருக்கும். கொள்கை கருப்பட்டியெல்லாம் சில நேரம் ரெண்டாம் பட்சம் தான், இந்த தேர்தல் அதுக்கு நல்லதொரு உதாரணம்.

தமிழகத்தின் ஆளுமை கட்சிகள்னா அது திமுக, அதிமுகன்னு ரெண்டும் தான் இது வரைக்கும் இருக்குது. அதுல உள்நோக்கி பார்த்தோம்னா 35 வயசுக்கு மேல இருக்குறவங்க தான் அந்த கட்சியோட உண்மையான வாக்கு வங்கி. கடந்த பத்து வருடத்திற்குள் கட்சியில் சேர்ந்தவங்க அவ்வளவு கொள்கைப்பிடிப்போட இருக்க மாட்டாங்க. பிரச்சாரத்துக்கே போனாலும் ஓட்டை மாத்தி குத்திட்டு போயிடுவான்

பெரிய கட்சிக்கே அந்த நிலமைன்னா பாமக, மதிமுக, தேமுதிக பத்தி சொல்லவே வேணாம். அவுங்களும் கட்சி உறுப்பினர் அட்டை இருந்தாலும் ஓட்டை அந்த கட்சிக்கு தான் போடுவாங்கன்னு சொல்ல முடியாது.

இது சாதாரண் விசயம் தானே, மேலும் அது அவுங்களோட உரிமைன்னு நாம பேசலாம். ஆனா கொஞ்சம் கூர்நோக்கி பார்த்தோம்னா மாற்றி விழும் ஒவ்வொரு ஓட்டும் பொது புத்தி அடிப்படையில் நான் ஜெயிக்கிறவன் பக்கம் நிக்கிறேன்னு போடும் ஓட்டு. அதுனால அவனுக்கு யாதொரு பயனும் இல்லைன்னு லேட்டா புரிஞ்சாலும் அடுத்த தேர்தல்லயும் அதே பொது புத்திக்குள்ள போயிருவான்.

ஒவ்வொரு தனிமனிதனுக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கு, ஒரு பக்கம் கூட்டம் அதிகமாகும் பொழுது கோழைகள் மிகச்சர்வ சாதாரணமாக தங்களை சமரசம் செய்து கொள்கிறார்கள். கோழைகள் என்ற வார்த்தை கொஞ்சம் அதிக்கபடிதான். இயலாதவர்கள்னு வச்சுக்கோங்க.



நாம எதுக்காக ஓட்டுப்போடுறோம்? யாரோ ஒருத்தர் மேல போய் உட்கார்ந்துகிட்டு நல்லா அனுபவிக்கட்டும்னா, உங்களுக்கும், உங்களை சார்ந்த சமூகத்திற்கும் நல்லது பண்ணனும்னு தானே, அப்போ நமக்காக பாராளுமன்றத்தில் பேசக்கூடியவர்களால் தானே அது சாத்தியமாகும்

சாதிகாரருக்கு ஓட்டுப்போடுவிங்களோ, மத அபிமானத்தில் ஓட்டுப்போடுவிங்களோ, உங்களுக்காக குரல் கொடுக்கும் வேட்பாளருக்கு ஓட்டுப்போடுங்க. ஓட்டு போடாம இருக்குறதை விட தவறான ஓட்டு பெரிய தண்டனை கொடுக்கும். அழகிரி, ரித்தீஷ், ராமராஜன் மாதிரியான ஆட்களை செலிபிரட்டி மோகத்தில் ஓட்டுபோட்டு எண்ணத்த கண்டிங்க? வாயை திறந்து பேசுனாங்களா நாடாளுமன்றத்தில்?

உங்களுடய ஒவ்வொரு ஓட்டும் சமுதாய நலன் கருதி இருக்க வேண்டும். மாற்று கட்சியா, மாற்று சாதியா, மாற்று மதமான்னு பார்க்காதிங்க. நம் சமுதாயத்திற்கு நல்லது செய்வாங்களா, நமக்காக நாடாளுமன்றத்தில் பேசுவாங்களான்னு யோசிச்சு உங்க ஓட்டை கொடுங்கள்

சிறு தவறும் ஐந்து வருடத்திற்கான தண்டனையை அளிக்கும்!

மரண தண்டனையை எதிர்க்கிறேன்!

குற்றங்கள் நடக்கையில் பொதுமக்கள் பெரும்பாலோர் உணர்ச்சி அடிப்பையிலேயே அதை அணுகுகின்றனர்.
அதிகபட்ச தண்டனை/கடுமையான தண்டனை என்றாலே அவர்களுக்கு கண் முன் மரண தண்டனை தான் வந்து நிற்கிறது.

மரணதண்டனை பெற்ற கைதி மரணத்தின் போது ஐந்து நிமிடம் அந்த வலியை அனுபவிப்பானா? அதன் பின்?

மரணம் தண்டனை அல்ல, விடுதலை என நான் ஆரம்பத்திலிருந்தே வலியிறுத்தி வருவதன் காரணம் அதுதான், மரண தண்டனையால் குற்றங்கள் குறையும் என எந்த நாட்டிலும் நிரூபிக்கப்படவில்லை. அதனால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது, ஒரு மரண தண்டனையால் குற்றவாளியால் கொல்லப்பட்டவர் எழுந்து வரபோவதில்லை.

ஏன் குற்றங்கள் என சமூகம் ஆராய்வதேயில்லை, வேலையின்மை, அங்கிகாரமின்மை, ஆதிக்க மனப்பான்மை(ஆதிக்கசாதி மனப்பான்மையும் தான்), பாலியல் வறட்சி கூடவே குடி இப்படி சமூகமே ஒரு மனிதனை குற்றம் செய்ய தூண்டும் பொழுது எவ்வாறு நாம் தண்டனையின் மூலம் மட்டுமே குற்றங்களை குறைத்து விட முடியும் என நம்புவது?

குற்றவாளியின் மனநிலையையும், குற்றம் செய்ததற்கான காரணங்களையும் ஆராயும் பொழுது அந்த சூழ்நிலை மற்றவர்களுக்கு ஏற்படாமல் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த முடியும். அதன் பொருட்டு எந்த சிரத்தையும் எடுத்துக்கொள்ளாதது அரசாங்கத்தின் தவறு.

சமூகம் நல்ல ஆண்மகனை வளர்க்க தவறுகிறது, அவன் செய்யும் குற்றங்களுக்கு பெண்கள் மேல் பழிபோடுகிறதும் ஆம்பளைன்னா அப்படி இப்படித்தான் இருப்பான் என்ற மனநிலையை சமூகத்தில் திணித்தது குறித்து இச்சமூகம் வெட்கமோ, வேதனையோ அடைந்ததாக தெரியவில்லை.



ஒவ்வொரு குற்றவாளியின் பிண்ணனியிலும் ஒரு மோசமான குடும்ப சூழ்நிலையும், சமூக அமைப்பும் இருக்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா? மரண தண்டனையினால் குற்றங்கள் குறையும் என்றால் நாட்டில் முக்கால்வாசி பேரை தூக்கில் போட வேண்டுமே. அத்தனை வஞ்சங்களும் நெஞ்சில் வைத்துக்கொண்டு தானே அலைகிறான்.

பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்ற பழிவாங்கும் முறையினால் குற்றவாளி செய்த அதே தவறை தானே சமூகமும் செய்கிறது. இதை எவ்வகையில் நியாயப்படுத்தமுடியும். உணர்ச்சிமிக்கவர்களின் ஓட்டைப்பெற அதிகபட்ச தண்டனை வழங்க அரசு உத்தரவிடும் அதே நேரம் ஒவ்வொரு மனிதனின் மனிதனின் மனதிலும் பழிவாங்குவது தவறில்லை என்ற எண்ணமும் வளரும். அரசே எவ்வழியோ மக்களும் அதே வழியே!

பானைக்கு வைத்தியம் பார்த்தா எனக்கெப்படி வலிபோகும்!

ரொம்ப கஷ்டப்படுறேன்னு அம்மா பக்கத்துல விசாரிச்சாங்க,
ரத்த்கட்டா இருக்கும் இல்லைனா மூச்சுபிடிப்பா இருக்கும். மாணிக்கம்பாளையம் முக்குல ஒருத்தர் எடுப்பாருன்னு அட்ரஸ் கொடுத்துருக்காங்க.

காலையிலயே நேரமா போயிட்டோம். அவரு விசயம் கேட்டுட்டு இருங்க தள(இலை) பறிச்சிட்டு வர்றேன்னு போயிட்டாரு, அரைச்சு பத்து போடுவாரு போலன்னு நினைச்சேன். ஒரு மண்பானை எடுத்துட்டு வந்து அது மேல இலையை கசக்கி + மார்க் போட்டாரு. நான் வேடிக்கை பார்த்துகிட்டே இருந்தேன்

உள்ளிருந்து ஒரு தாம்பாளதட்டு எடுத்துட்டு வந்தாரு, என்ன வைத்திய முறைன்னே புரியாம ஆச்சர்யமா பார்த்துகிட்டு இருந்தேன், அந்த தாம்பாளத்தில் முழுக்க தண்ணீர் ஊற்றினார். என்னை செருப்பை கழட்டிட்டு ஓரமா நிற்க சொன்னாரு. கவனிக்க, என்னை தொடக்கூட இல்லை.

கொஞ்சம் பேப்பர் எடுத்துட்டு வந்து அதை தீயிட்டு மண்பானைக்குள் போட்டாரு, அப்படியே தாம்பாளத்தட்டில் கவுத்துனாரு, கொஞ்சநேரத்தில் தட்டில் இருந்த தண்ணியை பானை உறிஞ்சிகிச்சு, பார்த்திங்களா மூச்சுகட்டு தான் இதுன்னாரு. இந்த தண்ணி கொஞ்ச கொஞ்சமா ரிலீஸ் ஆகும். அப்படியே உங்களுக்கு மூச்சுகட்டும் ரிலீஸ் ஆகும்னாரு.

எங்கம்மா வலி குறைஞ்சிருக்காடான்னுச்சு, பானைக்கு வைத்தியம் பார்த்தா எனக்கெப்படிமா குறையும்னு கேட்டேன். அவரு ஸ்ட்ராங்கா சொல்றாரு, சாயங்காலம் 6 மணிக்கு வாங்க கண்டிப்பா வலி இருக்காதுன்னு, ஒரு டம்பளர் எடுத்துட்டு வாங்க இதே ஜிமிக்ஸ் வேலையை நான் செஞ்சு காட்டுறேன்னு சொன்னேன். அதுக்கு மேல இருந்த நான் சண்டை போடுவேன்னு எங்கம்மா கூட்டிட்டு வந்துருந்துச்சு.

இந்த சீன பாரம்பரிய வைத்தியத்தை லோக்கலிலும் செய்யுறாங்க, பழைய பத்துபைசாவில் ஒரு சூடம் வச்சு என் முதுகில் வலி இருக்கும் இடத்தில் வச்சாங்க. அதை பற்றவைத்து அதன் மேல் டம்ப்ளரை கவுத்தினாங்க, உள்ளே வெற்றிடம் ஆகி என்னை கெட்டியா பிடிச்சிகிச்சு. பத்துநிமிடம் அப்படியே தான் இருந்தது.

முன்னைக்கு கொஞ்சம் நல்லா குனிய முடியுது, வலியும் குறைஞ்சிருக்கு, இன்னும் ரெண்டு நாளைக்கு இதையே செய்யலாம்னு இருக்கேன். இந்த வைத்திய முறையை கராத்தேகிட் படத்தில் ஜேடன் ஸ்மித்துக்கு ஜாக்கிசான் பண்ணுவார்

!

Blog Widget by LinkWithin