ASK!

மக்கள் போராட்டத்தை நான் இரண்டு காரணங்களுக்காக ஆதரிக்கிறேன்
ஒன்று. இனியும் மக்கள் நலன் சார்ந்தே இந்த அரசு இருக்கும் என்பதில் யாருக்கும் நம்பிக்கையில்லை. நாலரை லட்சம் கோடி தமிழகத்தின் கடனாம். நலதிட்ட பணிகள் அவ்ளோ நடந்திருக்கும்னு நம்புறீங்க. தனியாரிடம் நிலகரி வாங்குவது, மின்சாரம் வாங்குவது, எல்.ஈ.டி. பல்பு வாங்குவது என்று அனைத்திலும் கமிசன் ஊழல் நடந்துள்ளது போதமைக்கு அந்த கொள்ளையெல்லாம் அடித்த சசிகலா என்ற சின்னம்மா வழிகாட்டுதலில் தான் அரசு செயல்படுமாம். அந்த வழி எப்படி இருக்கும்னு சொல்லி தான் தெரியுமா என்ன? சரி சசிகலா தான் சிறைக்கு போய்டாரேன்னு நினைக்காதிங்க. கருப்பு பணம் வைத்திருந்த வழக்கில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மொத்தமாகவே அதிமுக என்றாலே ஊழலும், கொள்ளையும் தான்.

இரண்டாவது மக்களிடையே ஏற்பட்டுள்ள தகவல் தொடர்பு குறித்தான விழிப்புணர்வு. மொழி செழுமைக்கும், இந்தளவு அறிவியல் வளர்ச்சிக்கும் தகவல் தொடர்பு மிக முக்கிய காரணம் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆனாலும் இக்கால படித்த இளைஞர்கள் போதிய பகுத்தறிவு இல்லாமல் இருப்பது தான் பெரும்கவலை. யார் எதை சொன்னாலும் அப்படியே நம்புறாங்க. நெடுவாசம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பதை சேது சமுத்திர திட்டத்தோட ஒப்பிட்டு அதை மட்டும் ஆதரிக்கிறிங்க எங்கிறார் ஒருவர்.

சேது சமுத்திர திட்டம் என்பது தங்க நாற்கர சாலை மாதிரி வழிபாதை. இங்கேயாச்சும் சில இடங்களில் வயலை அழித்து ரோடு போட்டாங்க. கடலில் அழிக்க எந்த விளைநிலம் இருக்கு. ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிரேட் ரீஃப் பேரியர் போன்ற பவள பாறைகள் இங்கில்லை. இரண்டு நிலபகுதிகளுக்கு இடையே உள்ள கால்வாய் என்பதால் நீரோட்டமும் இல்லை. மீனவர்களுக்கு மாற்று ஏற்பாடு மட்டும் செய்து கொடுத்தால் போதும் இது அருமையான திட்டம்.

வட அமெரிக்காவையும், தென் அமெரிக்காவையும் இணைக்கும் பனாமா கால்வாய் இதற்கு ஒரு உதாரணம். அந்த கால்வாய் மட்டும் இல்லையென்றால் நியூயார்க்கில் இருந்து கலிபோர்னியா கடல் வழியாக செல்ல வேண்டுமென்றால் தென் அமெரிக்காவை சுற்றி ஆயிரகணக்காக கிலோமீட்டர் பயணம் செய்யவேண்டியிருக்கும். அதே போல் தான் சேது சமுத்திர திட்டமும். அது இல்லாததால் தற்சமயம் விசாகபட்டணித்தில் இருந்து மும்பை செல்ல இலங்கையை சுற்றி செல்கிறோம். வழியில் கொழும்பு துறைமுகத்திற்கு கப்பம் வேற. சில நூறு கிலோமீட்டர் என்றாலும் பயண செலவு குறையும் பொழுது பொருள் விலையும் குறையும் தானே. அது பொருள் வாங்கும் நம் போன்ற நுகர்வோருக்கு நல்லது தானே

சேது சமுத்திர திட்டம் நிறுத்தப்பட இயற்கை வள பாதுகாப்பு என நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். அது முற்றிலும் இந்துதுவா நம்பிகையான ராமர் பாலத்தை காப்பாற்றும் முயற்சி. ராமர் பாலத்தை நீதிமன்றம் ஏற்றுகொள்ளாது என்பதினாலேயே இயற்கை வள பாதுகாப்பு என்று திருப்பி விட்டார்கள். வரலாறு என்பதே புனைவால் புனையப்பட்ட புனைவு. அதை உண்மை என்று உங்களை நம்ப வைத்துவிட்டார்கள்.

ரொம்ப காலமெல்லாம் வேண்டாம். சமீபத்தில் ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி கைது செய்யப்பட்ட பொழுது ஒரு தொலைகாட்சியில் அய்யோ கொல்றாங்களே என்றும். இன்னொரு தொலைகாட்சியில் அமைதியாக அழைத்து சென்றது போலவும் காட்டப்பட்டது. அவர்களுக்கு எது செளகர்யமாக படுகிறதோ அதையே உண்மை என்று நம்மை நம்ப சொல்கிறார்கள். இந்த வரலாற்று கதைகள் எவ்ளோ பெரிய டுபாக்கூர் என்பதற்கு மற்றொரு உதாரணம் சீன யாத்திரிகர் யுவான் சுவாங் இந்தியா வந்து திரும்பிய பொழுது நெருப்பை கக்கும் ட்ராகனை பார்த்ததாக தன் குறிப்பில் எழுதியுள்ளார். வரலாறு எல்லாமே புலிகேசி தலையுடன் ஒரு வீரன் உடல் இணைத்த ஓவியம் போல் தான். அதிக பட்ச சாத்தியகூறுகள் இல்லாத எதையும் நம்புவது உங்கள் மூளையை கடைசி வரை ஃப்ரெஷ்சாவே வைத்திருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

சுதந்திர இந்தியாவின் மூன்றாம் தலைமுறை இளைஞர்கள் காலம், டிஜிட்டல் இணைய புரட்சி காலம் எல்லாம் இருந்தும் என்ன செய்ய? இன்றும் இந்த மெசேஜை ஃபார்வேர்ட் செய்தால் சம்பந்தபட்ட குழந்தைக்கு 10 பைசா போய் சேரும் என்று தகவல் பகிரப்பட்டுகொண்டு தான் இருக்கின்றது. இன்றைய இளைஞர்களுக்கு தேவை தெளிவான அரசியல் புரிதல். ஒரு பிரச்சனை குறித்து ஆழமாக விவாதிக்ககூடிய ஆர்வம். எதையும் அப்படியே நம்பாமல் எதிர் கேள்வி கேட்கும் துணிவு.


0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin