மிஸ் யூ அப்பா!

2013 மத்தியில் வரை சராசரி குடும்ப பொறுப்புகளுடன் தான் வாழ்க்கை ஓடியது. வீட்டு வாடகை, ஸ்கூல் பீஸ்னு இருந்த கமீட்மெண்டுகள் பத்து வருசமாக பழகிப்போன ஒன்றாகவே இருந்தது. பிரச்சனை ஆனப்பிறகு நான் வீட்டை காலி பண்ணிட்டு அம்மா வீட்டுக்கே வந்துட்டேன்.

எல்லார் வீட்டையும் போல நானும் அப்பாவுடன் பேசுவது குறைவே. ஆனால் அப்பா, அந்த ஃப்ரிஜுல இருக்குற இருக்குற பீர் எடுத்துக்கொடுங்கன்னு சொன்னா அதை ஓப்பன் பண்ணித்தருவார் எங்கப்பா. இளையகவி இப்போ ganesh kumar krish (ஃபேஸ்புக்கில்) நேரில் பார்த்திருக்கான்.

திரும்ப வீட்டுக்கு வந்த போது ஓவர் சரக்காகிபோச்சு எனக்கு, மனச்சிதைவின் விழிம்புவரை போய்ட்டு வந்துட்டேன்.  எங்கப்பா பெரிதா படிக்கல, கையெழுத்து கூட போட தெரியாது. நான் முதல் ரேங்க் எடுத்திருந்தாலும் என் வாத்தியார் இந்த கையெழுத்து நீயே போட்டியான்னு கேட்கிற அளவுக்கு ஒவ்வொரு தடவையும் டிசைன் டிசைனா போடுவார். ஆனால் கடைசி காலத்தில் நன்கு முதிர்ந்த மனிதராக நடந்து கொண்டார். நான் பிரச்சனையில் இருந்து வெளிவந்து சரக்கை விட அவரும் ஒரு காரணம் எனலாம். எத்தனை மணிக்கு வந்தாலும் சாப்டானான்னு கேட்டுட்டு தான் சாப்பிடுவார்.

எப்பவும் உடம்பு சரியில்லைன்னு படுத்து பார்த்ததில்ல, காய்ச்சல் அடித்தாலும் போன் வந்தா ஆட்டோ எடுத்துட்டு போயிருவார். நெஞ்சுவலின்னு படுத்தபோது இவ்ளோ சீரியஸ் ஆகும்னு யாருமே நினைக்கல. ஈரோடு,  மதுரை, சேலம்னு நண்பர்கள் உதவிடன் போராடிப்பார்த்துட்டோம். காப்பாத்த முடியல.

அவர் இறந்து ரெண்டு மாசம் வரைக்கும் கூட பெரியாத குடும்ப சுமை தெரியல, அப்ப்புறம் வந்தது பாருங்க வரிசையா, அங்க குழு, இங்க சீட்டு, அவளுக்கு வட்டி, இவனுக்கு கந்துன்னு டோட்டலா டவுசரை கிழிச்சிருச்சு. நான் வீட்டில் வந்து இருந்தபோது கூட சாப்பாட்டுக்கு இவ்ளோ கொடுன்னு கேட்டு வாங்கியதில்ல, எப்பவாச்சும் வாடகை கொடுக்க, வண்டி டீவ் கட்டன்னு ஆயிரம், ரெண்டாயிரம் கேட்பார் அவ்ளோ தான்.

பிறகு தான் தெரிந்தது. கஷ்டத்தை சொல்லாமல் வெளிய கடன் வாங்கியே வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருந்திருக்கார். அதை அடைக்க இங்க கடன், இதை அடைக்க அங்க கடன்னு வாழ்க்கைய ஓட்டினாலும் அதற்காக நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவும் தயாராக இருந்தார். ஆட்டோ ஸ்டேண்டில் ஆச்சர்யமா சொல்லுவாங்க. தொடர்சியா ஒரு மணிநேரம் உங்கப்பா வண்டி வண்டி ஸ்டேண்டில் நிக்காதுன்னு.

வாழ்க்கைய நீங்களா கத்துகோங்கன்னு சுதந்திரமா விட்ட அப்பா, இந்த சுமைகளை தாங்குவது எப்படின்னு மட்டுமாவது சொல்லிகொடுத்துட்டு போயிருக்கலாம். எங்கம்மா கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லும் போதெல்லாம் வேலைய பாரும்மான்னு வாயை அடக்கீருவேன். எங்கப்பா இப்ப இருந்தா பொடணி மேல போட்டு இந்நேரம் எதோ பேச்சியம்மாளியோ, ஒச்சாமாரியையோ கட்டி வச்சிருப்பார்.

ஒவ்வொரு நாளும் அவர் போட்டோவை ஆச்சர்யமா பார்க்குறேன். எப்படி இத்தனை சுமைகளையும் தாங்குனார், சமாளித்தார்னு. எனக்கு ஆறு மாசத்துக்கே மூச்சு முட்டுது.

உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் அப்பா! :(

1 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

ஆழ்ந்த அனுதாபங்கள் வால் பையன் !
மனந்தளராதீர்கள், உங்களால் இதை விட அதிகம் செயல் பட முடியும். நீங்கள் அவரின் அடுத்த தலைமுறை என்பதை நினைவில் கொள்ளுங்கள்

!

Blog Widget by LinkWithin